திங்கள், 25 ஏப்ரல், 2016

இஸ்லாம் - வரலாறு

0
இஸ்லாமிய வரலாறு என்பது உலக முஸ்லிம்களின் வரலாற்றைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப்பற்றிய ஆய்விற்கு "இஸ்லாமிய உலகு" மற்றும் "இஸ்லாமிய சமுகம் அல்லது உம்மாஹ்" ஆகிய கருதுகோள்கள் பற்றிய புரிதல் பயனுள்ளதாகும். இஸ்லாமிய உலகு என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை. மாறாக இதர சமயங்களை பின்பற்றுவோரும் அதில் உள்ளடங்கியிருந்தனர். எனினும் இஸ்லாமிய உம்மாஹ் என்பது முஸ்லிம்களை மட்டுமே குறிக்கின்றது.

இஸ்லாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முஹமது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முஹம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அராபியத் தீபகற்பம் முழுவதும் பரவியது. இது தவிர மற்றப் பகுதிகளிலும் இஸ்லாம் பரவ தொடங்கியது. முஹம்மது நபிக்கு பிறகு வந்த ராசூத்தீன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், உதுமானிய பேரரசு மற்றும் பல இசுலாமியப் பேரரசுகளின் காரணமாக இஸ்லாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. முஹம்மது நபியின் மரணத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளின் பிற்பாடு மேற்கே அட்லான்திக் சமுத்திரம் தொடங்கி கிழக்கே மத்திய ஆசியா வரையான நிலப்பரப்பு இஸ்லாமிய பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. அத்துடன் இசுலாமிய நாகரிகம் உலகின் கலாச்சார விஞ்ஞான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்தியதோடு பல விஞ்ஞானிகளையும் வானியலளர்களையும் கணித மேதைகளையும் மருத்துவர்களையும் தத்துவவியளாளர்களையும் உலகிற்கு தந்தது. மேலும் இசுலாமிய உலகில் தொழிநுட்பம், பொருளாதார உட்கட்டமைப்பு என்பனவும் சிறந்து விளங்கின. குர்ஆனை ஓதுதல் ஒரு முக்கிய விடயமாக இருந்ததன் காரணமாக உயர் எழுத்தறிவுவீதம் இஸ்லாமிய உலகில் காணப்பட்டது.

இக்காலப்பகுதி இஸ்லாத்தின் பொற்காலம் என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. மத்திய காலத்தின் பிற்பகுதியில் மொங்கோலிய படையெடுப்பினாலும் கறுப்புச் சாவு என்று வரலாற்றில் அறியப்படும் தொற்று நோய் பரவலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினாலும் பாரசீகம் முதல் எகிப்து வரை பரவியிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நலிவடைந்தது. இதனை தொடர்ந்தே துருக்கிய உதுமானிய பேரரசின் எழுச்சி ஆரம்பமானது. எனினும் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் நிலப்பரப்புக்கள் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. மேலும் முதலாம் உலகப்போரின் பின்னர் உதுமானிய பேரரசின் பகுதிகள் செவ்ரெஸ்ச்ச் ஒப்பந்தத்தின் பிரகாரம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 1924ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 20ம் நூற்றாண்டில் இசுலாமிய உலகை கம்யூனிசம் போன்ற பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருந்தபோதும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம் உலகின் அரசியல் விடயங்களில் இஸ்லாம் முக்கியமான பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக