சனி, 19 டிசம்பர், 2015

2016ம் ஆண்டிலும் ரேசன்கார்டில் உள்தாள்தான்...

0
தற்போதைய ரேசன் கார்டு மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரிசி வாங்கு வோர், சர்க்கரை வாங்குவோர், காவலர், எந்த பொருளும் வாங்காதோர் என, மொத்தம், 2.07 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. உணவு வழங்கல் துறை சார்பில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது.

2010ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டில், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், டிசம்பர் மாதம் வரை, நீட்டிக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அரசின் சலுகைகளை பெற சிலர், பல முகவரியில், அதிக ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர். இதனால், கூடுதல் செலவை தவிர்க்க, விழி, விரல் ரேகை பதிவுடன், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. மத்திய அரசு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு விழி, விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன், 'ஆதார்' அடையாள அட்டை வழங்கி வருகிறது. இந்த விவரங்களை, மத்திய அரசிடம் பெற்று, அதை, 'ஸ்மார்ட் கார்டு'க்கு பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதுதவிர, ரேஷன் கடை மூலமும், மக்களிடம் இருந்து, கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, 350 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைப்பு பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'டெண்டர்' கோரப்பட்டது. இதில் தேர்வான, 'ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்திடம், 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பணி, ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனம், 'ஸ்மார்ட் கார்டு' மென்பொருளை தயாரித்து வருகிறது. ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி இன்னும் நிறைவடையவில்லை என்பதால் 2016ம் ஆண்டிலும், 'ஸ்மார்ட் கார்டு'க்கு பதில் வழக்கம் போல், ரேஷன் கார்டில் உள்தாள் பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவு: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைத்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள் தாளை பயன்படுத்திக் கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கேட்டுக் கொண்டது. இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது.


Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக